National Day Message 2012 (Tamil)

PM Lee Hsien Loong | 8 August 2012

Minister for Foreign Affairs and Minister for Law K Shanmugam delivered Prime Minister Lee Hsien Loong's National Day Message 2012 in Tamil. The message was recorded at Bishan-Ang Mo Kio Park and telecast on 8 August 2012.

 

தேசிய தினச் செய்தி 2012

வணக்கம்.

நிச்சயமற்ற உலகச் சூழலில் நாம் இந்த ஆண்டின் தேசிய தினத்தைக் கொண்டாடுகிறோம். ஐரோப்பாவும் அமெரிக்காவும் கடுமையான பொருளியல் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன.

சீனாவிலும் இந்தியாவிலும் வளர்ச்சி மெதுவடைந்து வருகிறது.

தென் சீனக் கடலில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

எனினும், அனைத்துலக அளவில் ஒப்பிடும் போது, சிங்கப்பூரின் பொருளியல் ஓரளவு நன்றாகவே இருக்கிறது.

2012-ம் ஆண்டின் முதல் பாதியில் நமது பொருளியல் 1.7 விழுக்காடு வளர்ந்துள்ளது. இந்த ஆண்டு 1.5 முதல் 2.5 விழுக்காட்டு வளர்ச்சியை நாம் அடைய முடியும்.

HDB வீடு வேண்டுபவர்களுக்கு வீடு கிடைக்க நாம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

மேலும் அதிகமான MRT பாதைகளைக் கட்டுகிறோம்.

நமது பேருந்து சேவைகளை மேம்படுத்துகிறோம்.

GST வவுச்சர்களும் U-Save டிஸ்கவுன்டுகளும், குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும்.

இன்று சிங்கப்பூர் வெற்றிப் பாதையில் இருக்கிறது.

ஆனால், அடுத்த இருபது ஆண்டுகள் உலகம் பெரும் மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும்.

ஆசியாவில் உள்ள வளரும் பொருளியல்கள் வேகமாக முன்னேறுகின்றன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள், நமது வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

பெருமைக்குரிய சிங்கப்பூரர்களாக இருக்கவும், நமது இலட்சியங்களை நிறைவேற்றும் ஒரு வெற்றிகரமான நாட்டில் வாழவும், நாம் அனைவரும் விரும்புகிறோம். இந்த நோக்கத்தின் அர்த்தம் என்ன?

முதலாவதாக,: சிங்கப்பூரில் எப்போதும் எல்லோருக்கும் ஒரு மேம்பட்ட எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையை நாம் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனும் தன் இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு வெளிப்படையான சூழலை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு தலைமுறையும் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒரு மேம்பட்ட சிங்கப்பூரை ஒப்படைக்கும் ஒரு முற்போக்கான சமூகமாகத் திகழ வேண்டும்.

ஒரு நிச்சயமற்ற உலகத்தில் வெற்றி அடைவதற்குத் தேவையான திறன்களையும் அறிவாற்றலையும் நாம் அவர்களுக்கு வழங்குவோம்.

நல்ல, கட்டுப்படியான பிள்ளைப் பராமரிப்பு நிலையங்கள், பாலர் பள்ளிகள் இவற்றின் மூலம், நமது பிள்ளைகள் தொடக்கப்பள்ளி வாழ்க்கையை மற்ற பிள்ளைகளுடன் சமமான அறிவாற்றலுடன் தொடங்குவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.

இதற்காக நாம் பெற்றோர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

தேர்வுக்காக மட்டும் பிள்ளைகளைத் தயார்படுத்தாமல், ஒவ்வொரு பிள்ளையும் வாழ்க்கையை எதிர்கொள்ள நாம் அவர்களைத் தயார்படுத்துவோம்.

இரண்டாவதாக,: சிங்கப்பூர், அனைவருக்கும் பரிவுமிக்க சமுதாயமாக இருக்க வேண்டும்.

அனைவரும் தங்களால் முடிந்த வரை முயற்சி செய்ய வேண்டும்.

அதனை ஊக்குவிக்க நாம் திறமைக்கு முதலிடம் வழங்குகிறோம்.

சமுதாயத்திற்குத் திருப்பிப் பங்களிக்கும் ஒரு கடமை, வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களுக்கு உண்டு.

ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி, நமது வீட்டுரிமைத் திட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது நாட்டில் ஒரு பங்கை வழங்குகிறது.

நமது கல்வித் திட்டம் ஒவ்வொரு பிள்ளையும் வாழ்க்கையில் வெற்றி பெற தேவையான அறிவாற்றலையும் திறன்களையும் அளிக்கிறது.

நமது சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறை நல்ல தரமான, கட்டுப்படியான பராமரிப்பை வழங்குகிறது.

வசதி குறைந்தவர்களுக்கு உதவி செய்ய நாம் ComCare திட்டத்தையும், குறைந்த வருமான ஊழியர்களுக்காக Workfare திட்டத்தையும், அறிமுகப்படுத்தினோம்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானத் தம்பதிகள் இப்போது HDB வீடுகள் வாங்க கூடுதல் சப்ஸிடிகள் உள்ளன.

பள்ளிகளில், Opportunity Funds வசதி குறைந்த மாணவர்கள் enrichment நிகழ்ச்சிகளிலும் கல்விப் பயணங்களிலும் முழுமையாகப் பங்கெடுக்க உதவுகின்றன.

இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம், மேலும் ஒரு முக்கியப் படிக் கல்.

Silver Housing Grant வயதானவர்களுக்குப் பயனளிக்கிறது.

உயர்த்தப்பட்ட சப்ஸிடிகள், வீட்டில் வயதான பெற்றோர்களைப் பராமரிக்க மேலும் அதிக குடும்பங்களுக்கு உதவுகிறது.

ஆனால் அரசாங்கத்தால் அனைத்தையும் செய்ய முடியாது. அனைவரையும் உள்ளடக்குகிற ஒரு சிங்கப்பூரை உருவாக்குவதில் ஒவ்வொரு சிங்கப்பூரரும் தன் பங்கை ஆற்ற வேண்டும்.

இந்த வழியில்தான் நாம் ஓர் ஒற்றுமையான சமூகத்தைப் பேண முடியும்.

மூன்றாவதாக, ஒரு தனித்தன்மை வாய்ந்த இல்லமாகச் சிங்கப்பூரை நாம் உருவாக்கி உள்ளோம்.

இதற்கு, மேலும் மெருகு சேர்ப்போம்.

பீஷான்-அங் மோ கியோ பூங்காவைப் போன்று, பசுமையும் அழகும் நிறைந்த ஒரு சுற்றுச் சூழலை நாம் உருவாக்குவோம்.இந்தப் பாதுகாப்பான இல்லத்தை நாம் தற்காப்போம்.

இந்த நாட்டுணர்வும் அடையாளமும், குறிப்பாக, ஓர் உலகமயமான உலகத்தில் இருக்கும் ஒரு வெளிப்படையான சமுதாயத்திற்கு முக்கியமாகும்.

ஆனால், நம்மிடம் புதிய குடியேறிகளும் வெளிநாட்டு ஊழியர்களும் இருக்கும் போது, இந்தப் பண்புகளைப் பேணிக்காப்பது மேலும் கடினமாக இருக்கிறது.

நம் உள்ளமைப்பு வசதிகள் மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க நாம் வெளிநாட்டினர் வருகையைக் கட்டுப்படுத்துகிறோம்.

நாமும் நமது பிள்ளைகளும் மேலும் சிறப்பாகச் செயல்படுவதற்கு உதவும் வெளிநாட்டவர்களை நீங்கள் வரவேற்பீர்கள் என நான் நம்புகிறேன்.

தங்கள் பங்கிற்கு, புதிய குடியேறிகளும் சிங்கப்புருக்குத் தங்கள் விசுவாசத்தையும் அன்பையும் காட்ட வேண்டும்.

நாம் தொடர்ந்து வெளிநாட்டவர்களை வரவேற்றாலும், நமக்குச் சொந்தமான அடுத்த தலைமுறையை நாம் பேணி வளர்ப்போம்.

பல தம்பதிகள் பிள்ளைகள் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர்.

இந்த Dragon ஆண்டில் நாம் மேலும் அதிகமான குழந்தைகளை எதிர்பார்க்கிறோம்.

ஆனால், நமது சமுதாயத்தில் பிள்ளை பெறுவது தொடர்ந்து குறைந்து வருகிறது.

நமது குறைந்த குழந்தைப் பிறப்பு விகிதங்களின் அடிப்படைக் காரணங்களைச் சமாளிக்க வேண்டும்.

கூடுதல் ஆதரவுமிக்க சமூக மனப்பாங்கையும் வேலைச் சூழலையும் ஏற்படுத்துவோம்.

பெற்றோரின் சுமைகளைக் குறைப்போம்.

அவை, தம்பதிகள் இன்னும் அதிகமான பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள உதவும்.

நம் நாடு தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும் என்றால், நாம் நமது கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் மீண்டும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

தகுதிக்கு முன்னுரிமை, பல இனத் தன்மை, நிதி மதிநுட்பம் போன்ற மிக முக்கியப் பண்புகள் மாற முடியாது.

நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இதற்கு, இளம் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை வழிநடத்தும் பணியை அமைச்சர் Heng Swee Keat-டிடம் ஒப்படைத்துள்ளேன்.

நாங்கள் சிங்கப்பூரர்களை இந்த மறுஆய்வில் ஈடுபடுத்தி, ஒரு பொதுவான கருத்திணக்கத்தை உருவாக்குவோம்.

இதற்கு உங்கள் ஆதரவு தேவை.

நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து செயல்படுவோம்.

அப்போதுதான், நம் பிள்ளைகளுக்கு எப்போதும் இங்கே ஒரு மேம்பட்ட எதிர்காலமும், அனைவரையும் உள்ளடக்குகிற ஒரு சிறந்த இல்லமும் கிடைக்கும்.

மகிழ்ச்சிகரமான தேசிய தின வாழ்த்துக்கள்!

வணக்கம்.

 

TOP